20 March 2011

பூக்கள்


இதழ்கள் இருக்கின்ற போதும்,
பேசமுடியாத பூக்கள்,
இதழ் விரிப்பதுதானே 
அவற்றுக்குச் சிரிப்பு... சிறப்பு...

அதையும் பறித்துவிடாதீர்கள்
பூக்கள் சிரிப்பதில்லை என்று சொல்லி...

*****

பூப்பெய்யும் வரை பூக்குமா மரங்கள்
என்பது தெரியவில்லை...
ஆனால், 
பூத்த பின் பூப்பெய்யும் மரங்கள்
அழகுதான்...

*****

சொரியும் பூக்களின் அழகை ரசிக்கின்றேன்..,
அவற்றின் மரண உதிரலை உணராமலே...

(20.12.2010)

காதல்

இரு ஆத்மாக்களின்
மனச் சந்திப்பில்
உணர்வுகளின்
எழுச்சியில் உதிப்பது.

சோகத்திற்கும்
சுகானுபவத்திற்கும்
தனித்துவமாகிப்போன
துடிப்பு அது.

மௌனங்களின்
மொழி பெயர்ப்பில்
இசையும் கவிதை..,
காதல்...

நிசப்தத்தில்
உறைந்துபோகும்
இரவுகளில்..,
இருதயத்தின்
ஒரு ஓரத்தில்
எட்டிப்பார்க்கும்
நிலா... அது...

பார்வையில் ஒரு வீச்சு
சலனத்தில் ஒரு துளி
மௌனத்தில் ஒரு பேச்சு
இதயத்தில் ஒரு வலி
இவை தொடர்ந்த
ஒரு ஏகாந்தம்
காதல்...

மொத்தத்தில்,
சத்தமில்லாமல்
சரித்திரம் படைக்கும்
உயிர்க் காவியம்
காதலே..!

*****

காதலின் பிரசவம்
சிரிப்பினில் புரிவதில்லை.
அது
கண்ணீர்த் துளிகளிலேதான்
பிரசன்னமாகும்.

*****

நீ காதலித்திருந்தால்
உனது இதயத்துடிப்பின்
ஒலி
உனது காதுவரை
எதிரொலிக்கும்...
அப்பொழுது,
உனக்குள் சந்தோஷம்மட்டுமே
நர்த்தனமாடும்...
ஏனென்றால்,
உனது இதயம்
காதலுக்கு மட்டுமே
அர்ப்பணமாயிருக்கும்...

உனது காதல்
கல்லறைக்குள் அடங்கிப்போனால்
உனது உயிர்த்துடிப்பின்
வலி
நீ உள்ளளவும்
உன்னை வெறுக்கவைக்கும்...
ஏனெனில்,
உனது உயிர்
காதலில் மட்டுமே
உறைந்திருக்கும்.
அப்பொழுது,
உனது நினைவுகளுக்குள்
காதல் மட்டுமே
சமர்ப்பணமாயிருக்கும்...

*****

என் உயிரோடு வாசம் செய்பவளே
உன் இதழோர மௌனம்
என்னைக் கொல்லுதடி...
தளிர் நிலவாக என்னுள்ளே மலர்ந்தவளே
விழி நீர் கூடத்
துளிர்க்க மறுக்கிறதே...

*****

வஞ்சியே!

உன்னை என்
இதயத் துடிப்பில் வைத்துத்
தாலாட்டுவேன்..,
அது துடிக்கும்வரையிலும்...

உன் நினைவுகளை
அதன் மிருதுவான தாளத்தில்
உறங்கவைப்பேன்..,
அது அதிரும்வரையிலும்...

*****

எனது கண்கள்
இமைப்பதைக் கூட
நான் அனுமதிப்பதில்லை...
அவை
உனது விம்பத்தைக்
கணப்பொழுது
என்னிடம் பிரிப்பதனால்...

*****

அழகே!

நீ என்னுள் கலந்த
நாள் முதலாய்
நான் நானாகவில்லை...
நீயாகவே
நான் மாறிவிட்டேன்...

(2000)

12 March 2011

உன்னால்

நம்பிக்கைகள்
உடைக்கப்பட்டது உன்னால்,
நம்பிக்கை தந்தது
நீ என்பதால்
உடைத்தாயோ..?

சந்தோஷம்
தகர்க்கப்பட்டது உன்னால்,
சந்தோஷம் தந்தது
நீ என்பதால்
தகர்த்தாயோ..?

ஆறுதல்
பறிக்கப்பட்டது உன்னால்,
ஆறுதல் தந்தது
நீ என்பதால்
பறித்தாயோ...?

இவ்வளவும்
எடுத்துவிட்டு
வாழச்சொன்னால்..,
நான் என்ன
கல்லறையா..,
பிணம் சுமக்க..?


(15.06.2007)

09 March 2011

கவிதை

வரிகள் செதுக்கும்,
உணர்வின் சிற்பம்...
மொழியின்,
அழகிய பிரசவம்...


சுகத்தில்,
தெறித்துச் சிதறுவது...
சோகத்தில்,
சிதறித் தெறிப்பது...


மோகத்தில்,
பதறிச் சிலிர்ப்பது... 
தாபத்தில்,
சிலிர்த்துப் பதறுவது...


மென்மையில்,
வன்மை சொல்லும்...
வன்மைக்குள்,
மென்மை தேடும்...


அடக்கும்போது,
அலறி வெடிக்கும்...
வருடும்போது,
கொஞ்சிக் குலவும்...


ஒப்பனையின் உச்ச மோகனம்...
கற்பனையின் வேக வாகனம்...
கவிதை..!


(22.09.2007)