22 December 2011

மூன்று கால் முயல்

தெரியாதவ ன்/ள், முடியாதவ ன்/ள்
எனச் சீண்டும்போதுதான்
இந்த மூன்றுகால் முயல்
நான்குகால் பாய்ச்சலில்
நமக்குள் வந்துவிடுகின்றது.

சீண்டல்கள்
பிடித்தவர், பிடிக்காதவரென
யாரிடமிருந்து தூண்டப்பட்டாலும்
இந்த முயல்
நமக்குட் திரியத் தொடங்கிவிடும்.

தெரிந்தே, புரிந்தே
எதிர்க்கின்றோம்..,
எதற்கெனத்
தெரியாமல், புரியாமல்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
என்பது பிடிவாதம்...
இருந்துவிட்டுப் போகட்டும்...

நான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்
ஆக்குவது வக்கிரம்...
வேண்டாமே...

வாழ்க்கைத் தேடலில்,
மூன்றுகால் முயல் முடிச்சுப்போடும்...

விஞ்ஞான, பிரபஞ்சத் தேடலில்
மூன்றுகால் முயல் முடிச்சவுக்கும்...

எதுவுமே உண்மைதான் பொய்யாகும்வரை...
எதுவுமே பொய்தான் உண்மையாகும்வரை...

(09.03.2011)

10 December 2011

அலைபேசி

எத்தனை மெதுவாய்ப் பேசினாலும்
விளங்கிக் கொள்வேன்...
எவ்வளவு சூடாகிப் போனாலும்
தாங்கிக் கொள்வேன்...

ஆனால்,
படுக்கைக்கு முன்
பல்துலக்கா உன்
ஈரமுத்தத்தைத் தான்
சகித்துக்கொள்ள முடியவில்லை...

உன் காதல் அவசரத்துக்காக
அவஸ்தைப்பட
நான் என்ன உன் காத லனா/லியா...

'இச்'சத்தத்தைக் காவிச்செல்லும்
'அலைபேசி'தானே என்ற அலட்சியத்தைத்
தயைசெய்து இன்றோடு நிறுத்திவிடு...


*****

நித்திரைக்கு முன்
அப்போதும் இப்போதும்
அணைக்கின்றேன்
அலைபேசியை...

அப்பொழுது
அவ ளை/னைத் தேடி..
இப்பொழுது
அதனைத் தேடாதிருக்க...

(06.04.2011)

08 December 2011

எனதாக, எனக்காக, ஏக்கம்...

பட்டுத் திருப்பித் தெறிக்கும் ஏக்கங்கள்...

நம் நாட்டிலிருந்தபோது
ஏக்கங்கள் இருந்தனதான்,
இந்நாடுகள் மீது...

வாழ வந்தபின்னர்,
பெற்றவை வசதிகளாக
இழந்தவை வாழ்க்கையாக
ஏக்கங்கள் வலிகளாகின்றன...

இந்த வாழ்க்கையை விரும்பியவர்களே,
இங்கு வாழ்க்கையைத் தேடுகின்றோம்...

வாழ்க்கை..,
நம் நாட்டில் ஏங்கிக் காத்திருக்கின்றது,
நமக்காக...


(06.04.2011)

06 December 2011

மென்மை

என் மனம்
கடினமானதுதான்...
அதனால்தானோ
நீ எனக்குள்
அழிய முடியாமல்
பதிந்துபோனாய்..!

உன் மனம்
மென்மையானதுதான்...
அதனால்தானோ
நான் உனக்குள்
பதிய முடியாமல்
அழிந்துபோனேன்..?


(2006)