18 May 2012

வாழட்டும் உலகம்

வாழட்டும் உலகம்
என்றென்றும்
எம்மை
உள்ளிருத்திக்கொண்டு...

சிறுகச் சிறுகச் சிதைந்து
உக்காத எலும்புகள் ஆனதும்தானே
உள்ளாக்கப்பட்டோம் மண்ணுள்...

குவிந்து கிடந்த போதிலும்
ஒரு மிருகம்கூடக் குதறவில்லை,
அவையும் நம் கூடவே
குவிக்கப்பட்டுக் கிடந்ததால்...
ஆனால்,
அந்தக் குறையும் இருக்கவில்லை,
குதறிய மனித வெறியர்களால்...

கதறியபோது
நமது வலிகளைக்
கண்டுகொள்ளாத உலகம்,
குதறிய வடுக்களாய்
நம்மைக் கண்டபின்
பதறுகின்றது...

அணுகுண்டென்றால்
ஓரணியில் திரளும் உலகம்,
அணுவணுவாய் அழிக்கப்படுகையில்
எதிரணியிற்கூட ஏன் இல்லை...

அணுவால் அழிக்கப்பட்டிருக்கலாம்,
இப்படி
அணுவணுவாய் அழிக்கப்பட்டதிலும்...
வடுக்கள் தொடர்ந்திருந்தாலும்
வலிகள் சட்டென முடிந்திருக்கும்...

இப்படிக்குச்,
சடலங்களில் வீழ்த்தப்பட்டுச்
சடலங்களில் புதைக்கப்பட்டச்
சடலங்கள்...

இப்படி இதை எழுதியது,
இந்த வேதனைகளைப் பட்டறியாத
நாளைய சடலமொன்று...