06 December 2013

கருப்பு நெருப்பு.., நெல்சன் மண்டேலா..!

கம்பிகளுக்குப் பின்னிருந்து
போராடியதால்,
கருப்பின விடுதலைப்
போராளி...

காட்டுக்குள்ளிருந்து தொடர்ந்தும்
போராடியிருந்தால்
இன்றும் நீங்கள்
தீவிரவாதிதான்...

உங்களது
அஹிம்சைப் போராட்டம்
கம்பிகளுக்குள் அடைக்கப்பட,
உங்களுக்கும்
ஆயுதப் போராட்டம்தானே
எதிர்க்கும் வழியானது...

மன்னிப்புக் கேட்டால்
விடுதலை என்ற போது,
அடக்கப்பட்ட  வாழ்விலும்
அடைக்கப்பட்டு வாழ்வதே
மேலென,
இலட்சியம் இழக்க மறுத்தீர்கள்...

மாறும் போராட்ட வடிவங்களிலும்
மாறா இலட்சியம்
ஈற்றில் வெற்றி தரும்
என்பதன் சாட்சியானீர்கள்...

முத்  தசாப்தங்களுக்கு
நெருக்கமாய்
சிறைவாசமிருந்தும்
கருகிப் போகாத
கருப்பு  நெருப்பு
நெல்சன் மண்டேலா அவர்களுக்கு
அஞ்சலிகள்...