26 June 2015

"முதலான பெரும் முதல்"



ஒரே ஒரு கருவறை,
பல்லாயிரம் கருக்களின்
உருவாக்கம்.

ஒரே ஒரு இதயவறை,
பல்லாயிரம் குருதிகளின்
புதுச்சுரப்பு.

ஒரே ஒரு சுவாசவறை,
பல்லாயிரம் சுவாசங்களின்
புத்துணர்ச்சி.

இப்பல்லாயிரங்களில்
நானும் ஓர் அங்கம்
என்பதில்
என்றும் எனக்குப் பெருமிதம்.

நான் நானாக
முதற் புள்ளி தந்த
பெரும் பள்ளி.

நான் நானாக
முதல் அடி வைத்த
பெரும் படி.

ஆரம்பக் கல்வி தந்து
ஆணி வேர் ஊன்றத்தந்த
அறிவு நிலம்.

வளர்ந்த ஒவ்வொரு
வினாடித் துளிகளிலும்
வாழ்க்கை துளிர்த்தது.

வரம் பெற்று வந்த
மழலைகளாய்
வளரத் தொடங்கினோம்.

வளர்த்தது,
"இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்"

எமது அறிவின்
தொடக்கப்புள்ளி தந்த
ஆரம்பப்பள்ளி.

ஒவ்வொரு துகள்களிலும்
எம் பாதப் பதிவுகளைத்
தாங்கி, எம்மை
உயர்த்திவைத்த பள்ளி.

கூளாம் மர நிழலும்
கூடவே
காத்திருந்த அத்திவாரமும்
இன்றும் என்றும், என்
மனப்பதிவின் குளிர்த் தடங்கள்.

அருட்சகோதரிகளின்
தலைமைத்துவத்தில்
அருள் பெற்ற மாணவர்கள்,
வவுனியாவின் தனித்துவமானவர்கள்.

ஆண்டு ஐந்து வரையில்தான்
ஆண்களும் மாணவர்கள்
என்பதால், நாங்கள்
முன்னால் மாணவர்கள் அல்ல,
என்றும்
முதல் நாள் மாணவர்கள்.
முதல் தரமானவர்கள்.

இல்லாத எம்மை
வைரக்கல்லாக்கி,
மதிப்பில்லா எம்மை
விலைமதிப்பில்லாததாக்கி
ஒளிர வைத்தது
"உலகிற்கு ஒளியாக"

நன்றி சொல்லிட
நாம் வெளியோர் அல்ல.
வாழ்த்துச் சொல்லிட
நாம் பெரியோர் அல்ல.

மகிழ்கின்றோம்,
பெருமைகொள்கின்றோம்,
சேர்ந்தே கொண்டாடுகின்றோம்,
நம் பள்ளியை...

அடங்காப்பற்றுடன்,
அ. ஜெகான் தர்மேந்ரா

19 June 2015

மரத்துளி'ர்'!!!



வளர்ந்த மரத்தை
வெட்டிவிட்டு,
மரமாகப்போகும் செடிக்குப்
பாதுகாப்பு...

நேற்று,
வெட்டப்பட்ட இந்த மரமும்
பாதுகாக்கப்பட்டிருக்கலாம்...

நாளை,
பாதுகாக்கப்படும் இந்தச் செடியும்
வெட்டப்படலாம்...

இந்த மரத்தில் 
சாய்ந்துகொண்டு
இந்த மரத்தின் நிழலில்
நனைந்துகொண்டு,
மறைந்துகொண்டு,
மன நிலவை ரசித்திருந்த நாட்களை
இந்த மரம் 
இன்னமும் நினைவு வைத்திருக்கும்.

மீண்டும் ஒருமுறையேனும்
வெட்டப்பட்ட இந்த மரத்திலாவது
சாய்ந்துகொள்ளக் கிட்டுமா...
அதுவரை,
இதையேனும் விட்டுவைப்பார்களா...

மரமே...
என் மனதுக்குள் உன் வேர் வரும் என்றால்,
அழும் மனதின் ஈரம் தருவேன்,
நீ மீண்டும் துளிர்க்க...

(12.08.2012)

01 June 2015

சிதையாத தமிழுக்குச் சிதையா???

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ச்
சிதையாத தமிழுக்குச் சிதையா???

அழிக்கப்பட்டது
தமிழின் ஒரு கருவூலமே
அன்றித்
தமிழின் கரு மூலம் அல்ல...

'அழிவு'க்கே
'அ'கரம் கொடுத்து
ஆக்கிய தமிழ்
அழியுமா???

ஒலிகளுக்கும்
வரிவடிவம் கொடுத்து 
ஒளிரும் தமிழ்
ஒழியுமா???

எரியூட்டக் கருகியது,
தமிழ் நூற்களே
அன்றித்
தமிழ் அல்ல...

அதனால், என்றும்,
'தமிழ்' நூற்கும்
தமிழ் நூற்களை...

நேற்றைய கரி தொட்டு
இன்று வரையும் மொட்டு
நாளைகளெல்லாம்
விரிந்து கொண்டேயிருக்கும். 

சிதை யாதும் தமிழ் 
என்றாலும்
சிதையாது தமிழ்!!!