தினமொரு சுவை தேடிய நாவு...
சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...
கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...
கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...
முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...
தினமும் சாதமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...
உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...
சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...
தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...
எங்கோ ஒரு மூலையில்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
பட்டினிச்சாவின் கொடுமையை
இந்தச் சோற்றுப் பருக்கை
போக்கிவிடாதுதான்...
ஆனால்,
பல கைகள் வீணடிக்கும் பருக்கைகள்
ஒருவனுக்கு ஒருவேளை உணவாகலாம்...
ஒருவேளை அவனுக்கு உயிராகலாம்...
புரியாமல்,
அன்றைய நான் ஒருவன்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...
(02.02.2009)
No comments:
Post a Comment