21 February 2011

அவள் ஒரு மோகனம்

என் இதயத்தைக் கொள்ளை கொண்டவள்.
என் வார்த்தைகளுக்கு வெள்ளை அடித்தவள்.


என் நாயகி... அவள் பசும்பொன்...
பெயரிலே ஒரு கவர்ச்சி...
தேகமோ பெரும் மலர்ச்சி...
மெச்சினேன்.
அவள் உச்சிமோந்தாள்.

என் உடலெங்கும் மின்னதிர்ச்சி.
புது ஊற்றாய்ப் பொங்கியது மகிழ்ச்சி.

அவளின்
மிருந்தங்க அணைப்பில்
ஊமையன் என் உளறல்கூட
உன்னதமாய்ப் போனது.

அவள்
உச்சிமுதல் பாதம் வரைதான்
பார்த்துவிடத் துடித்தேன்...
ஆனால்,
இடையிலேயே பல்லாயிரம் விடயங்கள்...
தாண்ட முடியவில்லை...
இல்லை... முயலவில்லை...

அவளில் மூழ்கிப் பார்த்தேன்.
முற்றாக என்னை மறந்தேன்.
முழுவதும் உண்ணத் துடித்தேன்.
ஆகா..!
அவளொரு செந்தேன். மலைத்தேன்.
ஆனால்,
மறைக்க முடியவில்லை.

தினம் தினம் தொட்டுப் பார்த்தேன்.
தொடத்தொடப்
புதிய பரிமாணங்கள்...
மடியில் வைத்து மீட்டிப் பார்த்தேன்.
மீட்டமீட்டப்
புதிய ஸ்வரங்கள்...

என்னை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
தன் கருநிறக் கூந்தலில் முடிந்து கொண்டாள்.

முடிந்த பின்தான் தெரிந்தது,
அவள்..,
எனக்கு மட்டும் உரியவளல்ல
என்று...

அவளிற்
கலந்துபோன பலரோடு
நானும்
ஒருவனாகிப் போனேன்.

ஆனாலும் எனக்குக் கவலையில்லை.
ஏனெனில்,
அனைவருக்கும் அவளில் உரிமையுண்டு.

ஆம்..!
அவள் “தமிழ்மகள்”

(15.03.1998)