31 May 2017

நன்னயமா, நா நயமா, தேவை???

அன்று,
பட்டும், பார்த்தும்
உச்சவலியுணர்ந்த தமிழா,
இன்று,
அனர்த்தத்தில் ஆனந்தம் 
கொண்டு,
ஆண்டவன் தண்டனை 
என்கின்றாய்.

எதுவாய் இருந்தாலும்
இது
மனிதாபிமானமாய் இல்லை

அன்று,
மனிதாபிமானம் தேடித்தேடி
அவலப்பட்டோம்...
இன்று 
மனிதாபிமானம் தொலைத்துக்
கேவலப்படலாமா...

ஓலங்கள்
கண்டும் கேட்டும்
குதூகலிப்பதுவும்
திருப்திகொள்வதுவும்
மறத் தமிழர் குணமல்ல...
மாறாகத்
தமிழர் குறைக் குணம்...

இப்போது,
நன்னயம் கூடச்
செய்யத் தேவையில்லை
நா நயமாய் 
இருப்பதுவே பெருஞ்சேவை

முன்னர் ஓர் தடவை,
இப்படியானதோர் சந்தர்ப்பம்,
எதிரித் தேசம் என்று,
சாதகமாக்கப்படவில்லை. 
முதலாய்க் கரம் நீட்டியது,
தமிழர் தேசம். 
மறந்தாலும்
மறக்கடிக்கப்பட்டாலும்
நிகழ்ந்த உண்மை இது. 

"அவலங்களைத் தந்தவனுக்கே திருப்பிக் கொடு"
இதுதான் அவர் வாக்கே அன்றி,
அவலங்களைத் தந்தவனின்
அவலங்களில் திருப்தி கொள்வதல்ல,
அவர் வழிகாட்டல்

உதவ முடிந்தால் கரம் கொடு
முடியாவிட்டால்,
இறைவனிடம் வரம் வேண்டு.   

உயிரில்லாத உணர்வுகள்
வேண்டாம்
உயிர்களில் இல்லா உணர்வுகள்
வேண்டவே வேண்டாம்.

#Srl_Lanka_floods_2017

02 May 2017

ஓர் புது ஞானம்???

நினைத்தது கிடைக்காமல்
கிடைக்கும் சுகமும்
சோகமாகத்தானிருக்கும்...

நினைத்தது கிடைத்துக்
கிடைக்கும் வலிகூடச்
சுகமாகத்தானிருக்கும்...

மனதைத் 
தெரிந்துகொள்ளவும்
புரிந்துகொள்ளவும்
முடியுமென்றால் மட்டுமே,
மாச்சர்யங்கள் இல்லாத
மனித மனங்கள்
உலகில் உலா வரும்.

சாத்தியமாக்குமோ
விஞ்ஞானமோ..,
மெய்ஞானமோ...

அல்லது
சாத்தியமாக்க வேண்டுமோ
ஓர் புது ஞானம்???