பல்லி அறுத்துவிட்ட
வாலைப் போலே,
என்னை நீ அறுத்தபோதுதான்
தெரிந்துகொண்டேன்,
ஒட்டிக்கொண்டிருந்த
வால்தான் நானென...
பல்லிக்கும் உனக்கும்
வாலை அறுத்துவிட்டதோடு
முடிந்துபோனது...
எனக்கோ
என் மனதை அறுத்துக்
கூறுபோட்டுக்கொண்டேயிருக்கின்றது
அறுந்த அந்த வால்,
வாளாக மாறி...
(12.03.2010)
*****
அது, அன்று...
இன்றும்
பல்லி நினைத்துக்கொண்டிருக்கின்றது
அறுத்துவிட்டது தானென...
நானாகக் கழன்றுகொண்டதை
அது உணராமலே
கத்திக்கொண்டிருக்கின்றது...
ஒட்டிக்கொண்டு
அதற்கேற்ப ஆடிக்கொண்டிருப்பதிலும்
வெட்டிக்கொண்டு
எனக்காகத் துடித்துக்கொண்டிருப்பது
சுகமாய்த்தானிருக்கின்றது...
(09.01.2012)
No comments:
Post a Comment