24 September 2021

அப்பா! என் எழுத்தாஞ்சலிகள்!!



2021

24 ஆண்டுகள் நிறைவில்.., அப்பா! 
(My dad’s 24th memorial remembrance)

அருள் மட்டும் நிறைத்து
ஆனந்தம் முழுதாய்ப் பறித்து
ஏன் அப்பா விரைந்து விட்டகன்றீர்?

விரைவாக நீங்கள் சென்றது,
எங்கள் வாழ்வின் நிறைவைக் 
குறைத்துவிட்டது..,
என்பது 
மறுக்கவியலா உண்மைதான்…

ஆயினும்,
குறைந்த காலத்து உங்கள் 
வழிநடத்தலும் பாதுகாப்புமே
இன்றுவரை, இனியும் என்றால்..,
இன்னும் கொஞ்சமேனும்
எம்முடன் வாழ்ந்திருந்தால்…

🕯 இதய அஞ்சலிகள் அப்பா 🕯

🪔🕯🪔
        💧
          💧

உம் வம்சமும், சாயலும் இப்போ என்னுடன்..,
எல்லாமுமாய்.., தந்தையுமானவனாய்…


2020

23 ஆண்டுகள் நிறைவில்.., அப்பா!

தவித்திடும் தருணங்களில்
உங்கள்
கம்பீரக் காப்பின்றி...

மகிழ்ச்சிப் பொழுதுகளில்
உங்கள்
அன்பின் இருப்பின்றி...

ஆ(க்)கிய நாள் இன்று,
அப்பா!

🕯
இதய அஞ்சலிகள்!

உங்கள் ஸ்பரிசம் தர முயன்று,
உங்கள் அளவு தர இயலாது,
தோற்றுக்கொண்டிருக்கின்றேன்...


2019

22ம் ஆண்டு நினைவில்... அப்பா!

நேற்றைய அந்திப்பொழுதுபோல்
இருக்கின்றது,
என் சூரியனின் இறுதி நாள்...

அன்றைய தினம், காலை,
சகாய அன்னையின் பெருநாள் முடித்து,
பாடசாலைப் புதுக் கோவிலின்,
ஆரம்பத் திருவிழா நோக்கிய நாளொன்றில் 
நின்றுகொண்டிருக்க,

என் குடும்பச் சூரியன் அஸ்தமித்த சேதி வந்தது. 

தகவல் பரிமாற்றங்கள்,
இப்போது போலில்லை அப்போது, என்றாலும்,
குறுகிய பொழுதிலேயே,
பலரின் நேரடி அஞ்சலிகள், ஆறுதல்கள், உதவிகள்...

அதுதான்,
அப்பாவின், மற்றோருடனான உறவாடல்...
பார்க்கும் அனைவரும் நண்பர்கள்,
என்றிருக்கும் அப்பாவின் பார்வை...
ஆங்காங்கே இருந்த ஒன்றிரண்டு 
விதிவிலக்குச் சண்டைகளும்கூட,
அந்த நாளில் 
நிஜமாய்த்தான் துக்கம் கொண்டிருந்தன...

ஒரு கறுப்புச் சட்ட 
மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து,
என்னை ஆண்ட ஒற்றை விழிப்பார்வை,
ஒரு மரச்சட்ட கண்ணாடிக்குள்ளிருந்தும்,
என் மனப் பெட்டகத்திலிருந்தும்,
என்னை ஆள்கின்றது...

அப்பா,
இப்போதெல்லாம் 
‘என்னால்’
நீங்கள் உணர்ந்த,
ஸ்பரிசம்
உணர்ந்து கொண்டிருக்கின்றேன்...

கூடவே,
நீங்கள் இல்லா வெறுமையை
நிரம்பவே உணர்கின்றேன்...

ஆசிகள் தந்திடுங்கள், அப்பா!


2018

அப்பா!
என்றழைக்கப்
பதில் கிட்டாதபோதுதான்,
பெற்றதும் இழந்ததும்
புரிந்தது. 

அப்பா!
நாண் இழுத்த வில் நீங்கள்,
நாண் ஏறிய அம்பு நான். 

தந்த உந்துதலில்,
பயணித்துக்கொண்டிருக்கின்றேன். 

21ம் ஆண்டு
நினைவஞ்சலிகள்...


2017

அப்பா!

அந்தப் பாதுகாப்பு
வான் புகுந்து, மண் நுழைந்து,
இருபது ஆண்டுகள்!

இந்த நாள்
அன்று விடியாமலே
இருந்திருக்கலாம் என்றே,
விடிகின்றது,
இந்நாட்களெல்லாம். 

உங்கள்..,

விரல் நுனி ஊஞ்சல்,
காலிடைவெளி ஒளியல்,
முதுகுபட்டுத் தெறித்த மூச்சு,
கோபக் கடும்குரல்,
ஆழக் கரிசனை,
அவசிய வெருட்டல்,
வசிய வருடல்,
அசைவுகளின் அச்சம்,
இழைந்துவந்த பாசம்,
தவறுகளில் கண்டிப்பு,
தடவித்தழுவிய கண்விழிப்பு,

பெற்ற 
இன்ப வரங்கள்
இன்னும் பல இருக்க..,

பெற்றவரே,
இத்துயரம் ஒன்றை 
ஏன் தந்து சென்றீர்..?

மனம் உடைத்துச் சென்றாலும்,
மனம் நிறைந்து உள்ளீர்கள்...

இருபதாம் ஆண்டு நினைவஞ்சலிகள்!

தெய்வங்களாய்க் கிடைத்த
வரங்களை விரயம் செய்யாதீர்கள்!!!


2014

உங்களோடு
வாழ்ந்த காலத்திலும்,
உங்களோடு
வாழும் காலம்,
அதிகரிப்பதில்
ஆனந்தமில்லை...

நிஜமாய்க் கூடி வாழ்ந்த காலம்,
நினைவில் கூட வாழ்வதிலும்
கூடுதலாய் இருந்திருக்கலாம்...

நிஜமாய் நீங்கள் இல்லாமல்,
நினைவில் நிரம்பி இருப்பது
இழப்பை நிரப்பிடாது..,
அப்பா..!

பதினேழாம் ஆண்டு இதயவஞ்சலிகள்...


2013

தூங்கிய தோளும்
தாங்கிய நெஞ்சும்
தொடுகை விட்டுப்
பதினாறு ஆண்டுகள்...

தூக்கித் தோள்கொண்டு
தாங்காத் துயர்கொண்டு
மண்படுகை வைத்துப்
பதினாறு ஆண்டுகள்...

என்றென்றும்
மனத் தொடுகை விடாமலே..,
அப்பா!!!

“பதினாறாம் ஆண்டு நினைவஞ்சலிகள்”


2012

பதினைந்தாம் ஆண்டு நினைவில்...

ஈடில்லா இணையில்லாத் தந்தையே!

நீங்கள்..,
என்றும் எம் உயிர் வாழும் உயிர்ப்பு...
என்றும் எம் உளம் கமழும் உயிர்ப் பூ...

எந்தையே!
எம் வாழ்வின் தொடக்கம் நீங்கள்.
எம் மாறா அடையாளம் நீங்கள்.

என்றென்றும்
எம் முதலெழுத்தாய்
எம் முழுவுணர்வில்
வாழும் உங்களுக்கு
எங்களின்
நினைவஞ்சலிகள்...


2010

என் உயிரின் தொடக்கம் "அப்பா"...
என் மாறா அடையாளம் "அப்பா"...
முதலெழுத்தாய் என்றும் வாழும் என் தந்தைக்குப்,
பதின்மூன்றாவது நினைவஞ்சலிகள்.., இதயவஞ்சலிகளாக...


2009

இருந்த போது ஏங்காத நெஞ்சம்.., 
இல்லாத போது தாங்காத சோகம்... 
“அன்புத் தந்தையின் 12ம் ஆண்டு நினைவுநாள்”

No comments:

Post a Comment